தொழுகையின் முக்கியத்துவம்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)



அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என நினைத்து அண்ணல் நபி அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.

“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் “எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி அவர்கள். (புகாரி, முஸ்லிம்)



அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
அண்ணல் நபி நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)



அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நபிகள் நாயகம் அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் தொழுகைகளைச் சாpயான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஔpயாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)



அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நபி அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)



அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,

“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)



உமாடிபின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)



அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)




அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)
நான் நபி அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் “வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் அஹமத்)


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money